செய்திகள்
நாடு திரும்பும் இந்தியர்கள்

வந்தே பாரத் திட்டம் மூலம் 15 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்- ஹர்தீப் சிங் பூரி

Published On 2020-09-07 01:12 IST   |   Update On 2020-09-07 01:12:00 IST
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 15 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 15 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

சர்வதேச விமானங்கள் 2020 மே 6 முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தொடர்ந்து உதவுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் உட்பட பல்வேறு முறைகள் மூலம் திரும்பி வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் மிஷன் மே மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.

Similar News