செய்திகள்
தூரத்தில் நின்றபடி மகனை கொஞ்சும் மந்திரி சுரேஷ்குமாரின் மகள் டாக்டர் திஷா.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மந்திரியின் மகள் - தூரத்தில் நின்றபடி ஒரு வயது மகனை பார்த்து உருக்கம்

Published On 2020-09-05 20:27 GMT   |   Update On 2020-09-05 20:27 GMT
கொரோனா தடுப்பு பணியில் மந்திரி சுரேஷ்குமாரின் மகள் ஈடுபட்டு வருகிறார். ஒரு வயது மகனை பிரிந்து தனது மகள் பணியாற்றுவதாக மந்திரி உருக்கமாக தெரிவித்து இருந்தார்.
பெங்களூரு:

கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர் முன்களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் சுரேஷ்குமார். இவருடைய மகள் திஷா. டாக்டரான இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் விக்ராந்த் என்ற மகன் உள்ளான். டாக்டரான திஷா, தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் தனது ஒரு வயது மகன் விக்ராந்தை தனது தாய் மற்றும் தந்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார். அவர் அவ்வப்போது தனது தந்தையின் வீட்டுக்கு வந்து தூரத்தில் நின்றப்படி மகனை பார்த்து செல்வார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தனது மகனை பார்க்காமல் திஷா பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தனது மகனை பார்க்க, தந்தையின் வீட்டுக்கு திஷா சென்றுள்ளார். தூரத்தில் நின்றப்படி தனது மகனை திஷா பார்த்தார். அப்போது மந்திரி சுரேஷ்குமாரின் மனைவி சாவித்ரியிடம் இருந்த விக்ராந்த், தாயை பார்த்ததும் அவரிடம் செல்ல வேண்டும் என்று அழுதுள்ளான். ஆனாலும் சாவித்ரி அவனை விடவில்லை. இந்த பாசப்போராட்டம் பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது.

இதுகுறித்து மந்திரி சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘என் மகள் டாக்டர் திஷா, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடந்த 3 நாட்களாக தனது ஒரு வயது மகன் விக்ராந்தை பார்க்கவில்லை. வீட்டில் பாட்டியிடம் (என் மனைவி சாவித்ரி) இருக்கும் விக்ராந்தை திஷா தூரத்தில் இருந்து பார்த்து சென்றார். அப்போது எங்கள் இதயம் கலங்கியது’ என்று உருக்கமாக குறிப்பிட்டு தனது மகள் திஷா, பேரன் விக்ராந்தை தூரத்தில் நின்று பார்த்து செல்லும் படத்தை பதிவிட்டு இருந்தார்.
Tags:    

Similar News