செய்திகள்
அதிநவீன கழிவறையாக மாற்றப்பட்டுள்ள அரசு பஸ்சின் வெளிப்புறம் தோற்றம். அரசு பஸ்சின் உட்புற தோற்றம்.

அதிநவீன கழிவறையாக மாறிய அரசு பஸ்: துணை முதல்-மந்திரி திறந்து வைத்தார்

Published On 2020-08-28 08:36 IST   |   Update On 2020-08-28 08:36:00 IST
ரூ.12 லட்சம் செலவில் அதிநவீன கழிவறையாக அரசு பஸ் மாற்றப்பட்டுள்ளது. இதனை துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி திறந்து வைத்தார்.
பெங்களூரு :

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பெங்களூரு சர்வதேச விமான ஆணையம் இணைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் கிடந்த அரசு பஸ்சை ரூ.12 லட்சம் செலவில் அதிநவீன பொது கழிவறையாக மாற்றியுள்ளது. இது பெண்கள் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தின் முனையம் 1-ல் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அந்த அதிநவீன பொதுகழிவறை (ஸ்திரி டாய்லெட்) பஸ்சின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கர்நாடக துணை முதல்-மந்திரியும், போக்குவரத்து துறை மந்திரியுமான லட்சுமண் சவதி கலந்துகொண்டு அதிநவீன கழிவறை பஸ்சை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பெங்களூரு சர்வதேச விமான ஆணைய தலைமை அதிகாரி ஹேமந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

ரூ.12 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த பஸ்சில் 5 கழிவறைகள் உள்ளன. இதில் 2 வெஸ்டர்ன் கழிவறை ஆகும். மேலும் இந்த பஸ்சில் சென்சார் விளக்குகள், கைகழுவும் வசதி, குழந்தைகளுக்கு பால் புகட்டும் அறை, குழந்தைகளுக்கு உடை மாற்றும் அறை உள்ளது. இது பெண்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் இங்கேயே தான் நிற்கும். இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளகேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News