செய்திகள்
விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம்- உ.பி. முதல்வர் அறிவிப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
லக்னோ:
ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று இரவு லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற லாரி, இன்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.