செய்திகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை

Published On 2019-12-20 12:08 GMT   |   Update On 2019-12-20 12:08 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஜெய்ப்பூர்:  

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான, ஜெய்ப்பூரில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர். 185 பேர் காயமடைந்தனர்.  

இச்சம்பவங்களுக்கு வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்புதான் காரணம் என கூறப்பட்டது.

இதையடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது சயீப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமான், ஷாபாஸ் ஹூசைன் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஷாபாஸ் ஹூசைன் என்பவரை தவிர மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஷாபாஸ் ஹூசைன் என்பவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டது. 

குற்றவாளிகளுக்கான தண்டனை இருதினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4  பேருக்கு மரணதண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News