செய்திகள்

வடிவமைப்பாளர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் - லோக்பாலுக்காக இதை செய்தால் ரூ.25 ஆயிரம் பரிசு

Published On 2019-05-28 15:10 IST   |   Update On 2019-05-28 15:10:00 IST
உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்புக்காக இதை செய்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைக்கும்.
புதுடெல்லி:

உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்த இந்தியாவின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திரா கோஸ்(66) நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 19-5-2019 அன்று ஒப்புதல் அளித்தார். அவருடன் மேலும் 9 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பினாக்கி சந்திரா கோஸ்

நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், டாக்டர் ஐபி கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்புக்கான பொது இலச்சினை (லோகோ) மற்றும் குறிக்கோளை விளக்கும் வாசகம் (ஸ்லோகன்) ஆகியவற்றை வடிவமைத்து / உருவாக்கி தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகம் அறிவித்துள்ளது.

பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் ஸ்லோகன் எளிதாக விளங்கும் விதமாகவும் கருத்தை கவரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். ஸ்லோகனுக்கான வாசகம் 4 அல்லது 5 வார்த்தைகளுக்குள் ரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

குறிக்கோளை விளக்கும் வாசகங்களை இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனித்தனியாக அனுப்பலாம். இவற்றை எல்லாம் டெல்லியில் உள்ள லோக்பால் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க கடைசி தேதி ஜூன் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி லோகோவுக்கு 1239 பேரும், வாசகத்துக்கு 365 பேரும் தங்களது படைப்புகளை அனுப்பி வைத்துள்ள நிலையில் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் லோகோ மற்றும் வாசகங்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News