செய்திகள்
ஒடிசா - பானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு
ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #CycloneFani
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையே, பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பானி புயல் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 41 ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Fanitoll #CycloneFani