செய்திகள்

வாக்கு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்- சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Published On 2019-04-11 06:35 GMT   |   Update On 2019-04-11 06:35 GMT
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
அமராவதி:

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.



வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் 9 மணி வரை மாற்று இயந்திரம் இல்லாமல் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.

இதனையடுத்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, வரிசையில் காத்திருந்த ஏராளமான வாக்காளர்கள் திரும்பி சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரமாட்டார்கள்.

எனவே, வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #EVMmalfunction #ChandrababuNaidu
Tags:    

Similar News