செய்திகள்
துரைமுருகன் வீட்டில் சோதனை- தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது. #LokSabhaElections2019 #Duraimurugan #ITRaids
சென்னை:
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதற்காக துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் துரைமுருகனுக்கு நெருக்கமானவராக கூறப்படும் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும், சீனிவாசனின் சிமெண்டு கிடங்கில் ரூ.11.53 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை மற்றும் ஆவணங்களை கணக்கிடும் பணி முடிவடைந்த நிலையில், சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அறிக்கை அளித்தனர்.
வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின், தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும். கைப்பற்றப்பட்ட பணம், வேட்பாளருக்கு தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #Duraimurugan #ITRaids