செய்திகள்

பாஜக முதல்வரின் வாகன அணிவகுப்பில் ரூ.1.8 கோடி பறிமுதல்- பிரதமர் மீது வழக்கு தொடர காங். வலியுறுத்தல்

Published On 2019-04-03 15:43 IST   |   Update On 2019-04-03 15:43:00 IST
அருணாச்சல பிரதேசத்தில் முதல்வரின் வாகன அணிவகுப்பின்போது ரூ.1.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #ArunachalCM
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு மாநிலங்களில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பாஜக பண பலத்தைப் பயன்படுத்துகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் நகரில் நேற்று இரவு முதலமைச்சர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின், பாஜக மாநில தலைவர் தபீர் காவ் ஆகியோர் சென்றபோது, அவர்களுடன் வந்த வாகன அணிவகுப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி பாசிகாட் நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று காலை உரையாற்றினார். இதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பணம் மோடியின் பொதுக்கூட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது?

எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, அருணாச்சல முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யவேண்டும். முதல்வர் மற்றும் துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். பாஜக தலைவர் தபீர் காவ், அருணாச்சல் மேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ArunachalCM

Similar News