செய்திகள்

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? - மவுனம் கலைத்தார் ராகுல் காந்தி

Published On 2019-04-02 14:35 IST   |   Update On 2019-04-02 14:35:00 IST
வட இந்தியாவின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தென்னிந்தியாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் இந்த முறை போட்டியிடுவது ஏன்? என்பது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார். #Congress #RahulGandhi #Wayanad
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

அமேதி தொகுதி மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் வாக்காளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள பயந்தும், இங்கு மறுமுறை வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதாலும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி ஓட்டம்பிடித்து விட்டதாக பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்பது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தொடர்பாக எங்களுடன் நேரடியாக விவாதம் செய்வதை அவர் தவிர்த்து வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய காரணியாக ஊழல், வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளின் துயரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.



மோடியின் ஆட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதாக தென்னிந்தியா உணர்கின்றது. ‘உங்களுடன் நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை விதைப்பதற்காகவே இந்த முறை நான் வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #Wayanad

Similar News