செய்திகள்

தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திர மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் - சந்திரபாபு நாயுடு

Published On 2019-03-25 08:23 GMT   |   Update On 2019-03-25 08:47 GMT
தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திர மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

சித்தூர்:

ஆந்திர மாநிலத்தில் ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது. சித்தூர் மாவட்டம் பலமநேரில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார்.

பலமநேர் பஸ் நிலையம் அருகில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் தெலுங்கு தேசம் கட்சி அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாக்குச் சேகரித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் பொதுமக்கள் மிகப் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலை தொடர வேண்டுமென்றால், தெலுங்கு தேசம் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையிலும், ஆந்திர மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு கைவிரித்து விட்ட நிலையிலும், பல்வேறு நலத் திட்டங்களை தெலுங்கு தேசம் கட்சி அரசு செய்துள்ளது.

 


பலமநேர் சட்டமன்ற தொகுதிக்கு அந்திரி நீவா கால்வாய் அணையில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும். இதனால் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராத நிலை உருவாகும். இந்தச் சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்.

பலமநேர் வனப்பகுதியில் யானைகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பலமநேர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மந்திரி அமர்நாத்ரெட்டியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையால், பலமநேர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.  #ChandrababuNaidu

Tags:    

Similar News