செய்திகள்

அபிநந்தனை வரவேற்காமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதா?- பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

Published On 2019-03-02 04:21 GMT   |   Update On 2019-03-02 04:21 GMT
இந்திய விமானி அபிநந்தனை வரவேற்காமல் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். #PMModi #ChandrababuNaidu #Abhinandan
அமராவதி:

பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரை பஞ்சாப் மாநிலம் வாகா எல்லைக்கு அழைத்து வந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே அபிநந்தனை வரவேற்காமல் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று மாலை விசாகப்பட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மோடி பொதுக்கூட்டம் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



ஆந்திர மாநிலத்தின் மீது மோடிக்கு அக்கறை கிடையாது. அவர் இங்கு வந்து என்னை விமர்சனம் செய்தார்.

பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். மாவீரனான அவரை வரவேற்காமல் மோடி பொதுக்கூட்டங்களில் பேசி கொண்டு இருக்கிறார்.

சவுதிஅரேபியா இளவரசரை வரவேற்க செல்லும் அவருக்கு அபிநந்தனை வரவேற்க நேரம் இல்லையா? இதுதான் மோடியின் தேசப் பக்தியா?

அவர் அபிநந்தனை வரவேற்று இருந்தால் நாடே பெருமைப்பட்டு இருக்கும். பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை வைத்து மோடி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்கிறார். நாட்டின் ஹீரோ திரும்ப வரும்போது மோடி பொதுக்கூட்டங்களில் பேசி கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள பா.ஜனதா, “மற்ற நாட்டில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை அரசியல் தலைவர்கள் வரவேற்பது நடைமுறை இல்லை. ராணுவம்தான் வரவேற்று அழைத்து செல்லும்” என்று கூறி உள்ளது.   #PMModi #ChandrababuNaidu #Abhinandan
Tags:    

Similar News