செய்திகள்

பயங்கரவாதிகள் தாக்குதலை கொண்டாடிய காஷ்மீர் மாணவிகள் 4 பேர் மீது வழக்கு

Published On 2019-02-18 07:24 GMT   |   Update On 2019-02-18 07:51 GMT
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கொண்டாடிய 4 மாணவிகள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack
ஜெய்ப்பூர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதலால் நாடே பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஒரு மித்த குரல் எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் காஷ்மீர் மாணவிகள் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கொண்டாடி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள என்.ஐ.எம். தனியார் பல்கலைக்கழகத்தில் 2-வது ஆண்டு மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நசீர், உஸ்மா நசிர் ஆகிய 4 பேர் வாட்ஸ் அப்பில் பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் படங்களை வெளியிட்டு உள்ளனர்.

காஷ்மீர் மாணவிகள் கொண்டாடும் இந்த படம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் மத்தியில் வேகமாக பரவியது. இது குறித்து அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் 4 பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

இதே போல ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்திலும் காஷ்மீர் மாணவிகள் குறித்து பல்கலைக்கழகம் சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 4 மாணவிகள் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதே போல இமாச்சல பிரதேசத்தில் காஷ்மீர் மாணவர் ஒருவர் பயங்கரவாதிகளை புகழ்ந்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

சமூக வலை தளங்களில் பயங்கரவாத தாக்குதலை புகழ்ந்தது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack
Tags:    

Similar News