செய்திகள்

விஷப்பாம்புகளின் உறைவிடமாக மாறி வரும் ஐதராபாத்

Published On 2019-01-30 09:42 GMT   |   Update On 2019-01-30 09:42 GMT
ஐதராபாத்தின் பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதிகளில் விஷப்பாம்புகள் அதிகமாக வாழ்கின்றன எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Hyderabad #venomoussnake
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில், 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. ஏராளமான மக்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தின் முக்கிய பகுதிகளாக கருதப்படும் ஜூப்ளி ஹில்ஸ், காச்சிபவ்லி, கொண்டப்பூர் மற்றும் அட்டாப்பூர் பகுதிகளில் விஷப்பாம்புகளின் வரத்து அதிகரித்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாம்பினங்களின் நண்பர்கள் எனும் அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு வனத்துறையினரின் உதவியுடன் நடத்திய ஆய்வில் பாம்புகளின் எண்ணிக்கையும்  கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுள் 50 சதவீதம் கண்ணாடிவிரியன் பாம்பு வகையினை சார்ந்தது.

இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் அவினாஷ் விஸ்வநாதன் கூறியதாவது:

எலிகளை வேட்டையாடி உண்ணும் பாம்பினங்கள் ஐதராபாத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த எலிகள் மற்றும் பாம்புகள் திறந்த வெளிகளில் கொட்டிக் கிடக்கும் குப்பைகளில் இருந்து வருகின்றன. மேலும் வனப் பகுதிகளில் அதிகம் காணப்படும் மலைப்பாம்பு போன்ற விஷதன்மை குறைந்த உயிரினங்களும் அதிகரித்துள்ளன.

இப்பகுதிகளில் கட்டுமானங்களுக்காக பாறைகள் அகற்ற, வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக ரஸல்ஸ் வைப்பர், கண்ணாடி விரியன் போன்ற கொடிய விஷப்பாம்புகள் வெளிவருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News