செய்திகள்

அயோத்தி நிலம் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் - மத்திய சட்ட மந்திரி விருப்பம்

Published On 2019-01-28 09:43 GMT   |   Update On 2019-01-28 09:43 GMT
அயோத்தியில் சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என இந்த நாட்டின் குடிமகனாக விரும்புகிறேன் என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். #Ayodhyacase #RaviShankarPrasad
பாட்னா:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு முன் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.



ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு நாளைய விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, நாளை நடைபெறுவதாக இருந்த விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய சட்டத்துறை மந்திரி  ரவிசங்கர் பிரசாத் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். இவ்விவகாரம் சட்டப்படித்தான் தீர்க்கப்பட வேண்டும். எனினும், இந்த சர்ச்சை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.

கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. எனவே, இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் கூற வேண்டுமானால் இந்த விவகாரத்துக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

சபரிமலை வழக்கு உள்பட சில விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட் மிக அவசரமான விசாரணைகளை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில போலீசார் பலரை கைது செய்த வழக்கு, மெஜாரிட்டியே இல்லாத எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் இரவு முழுவதும் விசாரணை நடத்தப்பட்டது. இதெல்லாம் நல்ல விஷயம்தான்.

இதேபோல், நாட்டு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கும் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார். #Ayodhyacase #RaviShankarPrasad
 
Tags:    

Similar News