செய்திகள்

கேரளாவில் முதன் முறையாக பைக் விபத்தில் காயமடைந்த ஊழியருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு

Published On 2019-01-26 18:07 IST   |   Update On 2019-01-26 18:07:00 IST
கேரளாவில் நடந்த விபத்து வழக்கில் ஒருவருக்கு ரூ.2.63 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த வேளி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகுமார், தனியார் நிறுவன ஊழியர்.

ஹரிகுமார் கடந்த 2014-ம் ஆண்டு திருவனந்தபுரம் கவடியார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகுமார் படுகாயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஹரிகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரது உடலில் ஒரு பகுதி செயல் இழந்தது. இதனால் அவர், படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்து உடல் செயல் இழந்த ஹரிகுமாருக்கு இழப்பீடு கேட்டு திருவனந்தபுரம் மோட்டார் வாகன கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஹரிகுமாருக்கு ரூ.1 கோடியே 99 லட்சம் இழப்பீடும், இந்த தொகைக்கு வழக்கு தொடரப்பட்ட 2015-ம் ஆண்டு முதல் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும். அதோடு கோர்ட்டு செலவு உள்ளிட்டவைகளையும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவு மூலம் ஹரிகுமாருக்கு ரூ.2.63 கோடி இழப்பீடு கிடைக்கும். இதனை இன்சூரன்ஸ் நிறுவனம் 1 மாதத்தில் வழங்க வேண்டு மென்று கோர்ட்டு கூறி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News