செய்திகள்

சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

Published On 2019-01-22 14:13 GMT   |   Update On 2019-01-22 14:13 GMT
கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer
பெங்களூரு:

கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராக பொறுப்பு வகித்து வந்தவர் சிவகுமார சுவாமி. இவர் கடந்த 1941-ம் ஆண்டில் இருந்து துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

வயோதிகம் சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி நேற்று காலை 11.40 மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் சித்தகங்கா மடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மந்திரி சதானந்தா கவுடா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, யோகா குரு ராம்தேவ் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள், பக்தர்கள், சீடர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஜீயர் சிவகுமார சுவாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #ShreeShivakumaraSwamiji #Siddagangaseer 
Tags:    

Similar News