செய்திகள்

டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ராஜினாமா

Published On 2019-01-04 04:16 GMT   |   Update On 2019-01-04 04:16 GMT
டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #AjayMaken #DelhiCongress
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரியான அஜய் மக்கான் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், படுதோல்வியை சந்தித்ததையடுத்து, அஜய் மக்கானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே அஜய் மக்கான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதையடுத்து பதவியை தொடர்ந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்புகூட உடல்நலக்குறைவு காரணமாக அஜய் மக்கான் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை காங்கிரஸ் உடனடியாக மறுத்ததுடன், அவர் தற்காலிகமாக பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக விளக்கம் அளித்தது.

இந்நிலையில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அஜய் மக்கான் விலகியுள்ளார். நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின் ராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “2015 தேர்தலுக்கு பிறகு டெல்லி காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய 4 ஆண்டுகளில் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததுடன், எனக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை காரணமாகவே அஜய் மக்கான் ராஜினாமா செய்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பதவி விலகியிருப்பதால், பாராளுமன்றத் தேர்தல் பணிகளுக்கான புதிய மத்திய பொறுப்பு வழங்கப்படலாம் அல்லது வேட்பாளராகக் கூட நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  #AjayMaken #DelhiCongress
Tags:    

Similar News