செய்திகள்

பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு - காஷ்மீரில் 144 தடை உத்தரவு

Published On 2018-12-17 01:22 GMT   |   Update On 2018-12-17 01:22 GMT
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #SrinagarPulwama #Section144
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் 7 பேர் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. மேலும் இன்று (திங்கட்கிழமை) தலைநகர் ஸ்ரீநகரில் பதாமி பாக் என்கிற இடத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்தவும் அந்த அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் 2 மாவட்டங்களிலும் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. #SrinagarPulwama #Section144 
Tags:    

Similar News