செய்திகள்

சுயமரியாதை உள்ளவர்கள் தேசிய ஜனநாயக அரசில் பணியாற்ற மாட்டார்கள் - ப.சிதம்பரம்

Published On 2018-12-10 14:47 GMT   |   Update On 2018-12-10 14:47 GMT
ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசில் சுயமரியாதை உள்ள கல்வியாளர்கள், அறிவாளிகள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். #PChidambaram #UrjitPatel
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக கடந்த 5-9-2016 அன்று பொறுப்பேற்ற உர்ஜித் பட்டேல் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது பணிக்காலத்தில் ஆற்றிய கடமைகளுக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ள நிலையில் சுயமரியாதை உள்ளவர்கள் யாரும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் பணியாற்ற மாட்டார்கள் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கி மேலிட கூட்டத்தின்போதே உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த அரசு தனது வழியை மாற்றிக்கொள்ளும் என அவர் கருதி இருக்கலாம். ஆனால், அப்படி எல்லாம் நடக்காது என்பது எனக்கு தெரியும். நல்லவேளையாக மீண்டும் ஒரு அவமதிப்பான கூட்டம் நடப்பதற்கு முன்னர் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இதை அறிந்து நான் ஆச்சரியப்படவில்லை. வேதனைப்படுகிறேன். இந்த அரசில் சுயமரியாதை உள்ள எந்த கல்வியாளர்களும், அறிவாளிகளும் பணியாற்ற முடியாது’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியை ஒரு குழுவினரால் நடத்தும் கம்பனியாக மாற்ற இந்த அரசு நினைக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் பொருளாதார சீர்குலைவை சரிகட்டுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை பறிப்பதுதான் இந்த அரசின் அவசர நோக்கமாக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #selfrespectingscholar #selfrespectingacademic #NDAgovt #PChidambaram #UrjitPatel
Tags:    

Similar News