செய்திகள்

மேகதாது விவகாரத்தை பேசி தீர்க்கலாம் - தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் அவசர கடிதம்

Published On 2018-12-06 07:56 GMT   |   Update On 2018-12-06 07:56 GMT
மேகதாது விவகாரத்தை பேசி தீர்க்க கர்நாடக அரசு விரும்புவதாக கூறி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
பெங்களூரு:

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.



இதற்கிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்துவருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளார்.

‘மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும் தமிழக மக்களும் நினைப்பது வேறு, ஆனால் உண்மை நிலை வேறு. மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம். சுமுகமாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புகிறது’ என்று அமைச்சர் சிவக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuDam #KarnatakaMinister #EdappadiPalaniswami
Tags:    

Similar News