செய்திகள்

பிழையான தமிழ் பெயர் பலகை திருத்தி அமைக்கப்படும் - குஜராத் அரசு அறிவிப்பு

Published On 2018-11-02 09:44 GMT   |   Update On 2018-11-02 09:44 GMT
படேல் சிலை திறப்பு விழா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிழையான தமிழ் பெயர் பலகை திருத்தி அமைக்கப்படும் என்று குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #SardarPatel #UnityStatue
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உலகின் மிகப்பெரிய சிலையை கடந்த 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையொட்டி சிலை திறப்பு விழா வளாகத்தில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்பது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் அப்படியே எழுதப்பட்டு இருந்தது. ஆனால் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையாக எழுதப்பட்டு இருந்தது.

ஒற்றுமையின் சிலை என மொழி பெயர்க்காமல் ஆங்கில வார்த்தை தமிழில் அப்படியே பிழையுடன் எழுதப்பட்டது. தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அறிந்த அமைச்சர் க.பாண்டியராஜன் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர்கள் தமிழ் எழுத்தை மறைத்துவிட்டார்கள். பிரதமர் விழா என்பதால் உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, சிலை அமைப்பு பணி குழுவில் தமிழர்களும் இடம் பெற்று இருந்தனர். இருந்தும் தவறு நடந்து இருப்பது துரதிர்ஷ்ட வசமானது என்றார்.

இதற்கு குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்ற ஆங்கில வாசகம் 10 மொழிகளில் இடம் பெற்று இருந்தது. தமிழ் வாசகம் தவறானது என்று சில பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததும் உடனடியாக அதை அகற்ற உத்தரவிடப்பட்டது. இது சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.   #SardarPatel #UnityStatue

Tags:    

Similar News