செய்திகள்

கட்டாய விடுப்பை ஏற்க முடியாது - சிபிஐ இயக்குனர், சிறப்பு இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மனு

Published On 2018-10-24 06:24 GMT   |   Update On 2018-10-24 06:24 GMT
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதற்காக கட்டாய விடுப்பில் அனுப்புவதை ஏற்க மறுத்து, சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI
புதுடெல்லி:

சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கு அவர் பொறுப்பேற்றார்.

அதேசமயம், இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் செல்லலாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஊழல்  குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்புவதை ஏற்க முடியாது என கூறியுள்ளனர். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது. #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI 
Tags:    

Similar News