செய்திகள்
மனைவி கொலை வழக்கில் பிரபல டிவி தொகுப்பாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து
மனைவியை கொன்ற வழக்கில் பிரபல டிவி தொகுப்பார் சுஹைப் இல்யாசிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #SuhaibIlyasi
டெல்லி:
‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் 1998-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மிகுந்த பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை இயக்கி தயாரித்தவர் சுஹைப் இல்யாசி. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிழக்கு டெல்லியில் உள்ள சுஹைப் இல்யாசியின் வீட்டில் அவரது மனைவி அஞ்சு இல்யாசி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தனக்கும் தன் மனைவிக்கு சண்டை ஏற்பட்டது, அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சுஹைப் போலீசில் கூறியிருந்தார். ஆனால், தனது மகளை சுஹைப்தான் கொன்று விட்டதாக அஞ்சுவின் தாயார் புகாரளித்தார். இதனையடுத்து, சுஹைப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.
17 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் சுஹைப்புக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.