செய்திகள்
சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றி கொண்டாட்டம் - ராஜஸ்தானில் பிரதமர் தொடங்கி வைத்தார்
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றி கொண்டாட்டத்தை ராஜஸ்தானில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #Surgicalstrikes #ParakramParv
ஜெய்ப்பூர்:
காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.
இதைதொடர்ந்து, கடந்த 29-9-2016 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் (ரண சிகிச்சை தாக்குதல்) என வர்ணிக்கப்பட்ட இந்த தாக்குதல் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை இம்மாதம் 28 முதல் 30-ம் தேதிவரை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
‘பராக்ரம் பர்வ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கொண்டாட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இங்குள்ள கோனார்க் போர் நினைவு சின்னம் வளாகத்தில் இந்திய ராணுவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் மோடி, பாதுக்காப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இங்கு வைக்கப்பட்டுள்ள வருகையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்ட மோடி, தாய்நாட்டை காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்களை எண்ணி நாடு பெருமிதம் கொள்கிறது. அவர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக விளங்கும் என குஜராத்தி மொழியில் எழுதிப் பதிவிட்டுள்ளார். #Surgicalstrikes #ParakramParv