செய்திகள்

அகிலேஷ் நீர்ப்பாசன திட்ட ஊழல் - 6 போலி நிறுவனங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

Published On 2018-09-11 13:13 IST   |   Update On 2018-09-11 13:13:00 IST
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட கோமதி நீர்ப்பாசன திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக 6 போலி நிறுவனங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. #AkhileshYadav
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரியாக இருந்தபோது கோமதி ஆற்றில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இதில் ஊழல் நடந்து இருப்பதாக கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா குற்றம் சாட்டியது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் பிரசாரம் செய்தது.

அதன்படி பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், கோமதி ஆற்று நீர்ப்பாசன திட்ட ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாநில போலீசார் நடத்திய விசாரணையில் நீர்ப்பாசன திட்ட ஊழலில் அகிலேஷ் யாதவுக்கும் 6 போலி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


இதையடுத்து 6 மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார். இதில் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் டெண்டர் எடுத்து திட்டங்களை செயல்படுத்தியதும் இதில் முறைகேடு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெண்டர் எடுத்த தொகைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் தெரியவந்தது.

போலி கம்பெனிகள் மூலம் ஊழல் நடந்து இருப்பதாகவும் இதில் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதில் நடந்த சட்ட விரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிகையாக தகுதியற்ற 6 நிறுவனங்களுக்கும் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் நீர்ப்பாசன திட்ட ஊழல் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  #AkhileshYadav #Gomtiproject
Tags:    

Similar News