செய்திகள்
உத்தரப்பிரதேசம் - கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. #UPHeavyRain
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உ.பி.யின் பஸ்தி, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று இன்று பார்வையிட்டார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த புதன்கிழமை இரவு வரை மழை தொடர்பான விபத்துக்களில் 18 பேர் பலியாகியுள்ளனர். அதில் பைசாபாத் மற்றும் உன்னாவ் பகுதியில் 8 பேர், கோண்டா, ராம்பூரில் தலா 2 பேர், அவுரியா, ஹர்டோய், மீரட், இடா, கவுஷாம்பி, காசிப்பூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் மழைக்கு பலியாகினர்.
உ.பி.யில் ஓடும் பல ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர். #UPHeavyRain