செய்திகள்

ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இருவர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Published On 2018-09-04 13:38 IST   |   Update On 2018-09-04 13:38:00 IST
ஐதராபாத் நகரில் உணவகம் மற்றும் திறந்தவெளி திரையரங்கில் 44 உயிர்களை பறித்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இருவர் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. #Hyderabadtwinbomb #twinbombJudgement
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும்  திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என மொத்தம் 44 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர்.  3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் கடந்த 7ம் தேதி நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் ஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீனிவாஸ் தீர்ப்பளித்துள்ளார்.

இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 10-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக கூறப்படும் தாரிக் அஞ்சும் தொடர்பாக அன்றைய தினம் தீர்ப்பளிக்கப்படும்.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பரூக் ஷர்புதீன் டர்க்காஷ் மற்றூம் சாதிக் இஸ்ரார் அஹமத் ஷேக் ஆகியோரை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார். #Hyderabadtwinbomb #twinbombJudgement
Tags:    

Similar News