செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி

Published On 2018-09-01 07:14 GMT   |   Update On 2018-09-01 07:14 GMT
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், மிதமிஞ்சிய போதையில் பக்கத்து இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #AIFlight #DrunkPassenger
புதுடெல்லி:

நியூயார்க்கில் இருந்து நேற்று புதுடெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் பயணம் செய்த ஒரு பயணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் தள்ளாடியபடி அங்குமிங்கும் சென்றுள்ளார். பின்னர், ஒரு பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இது அந்த பெண் பயணி மற்றும் சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து பெண் பயணியை வேறு இருக்கைக்கு மாற்றி உள்ளனர். விமானம் டெல்லி வந்து சேர்ந்ததும், அந்த பெண் பயணிக்கு நேர்ந்த அவமரியாதை மற்றும் அதிர்ச்சி அனுபவம் குறித்து அவரது மகள் இந்திராணி கோஷ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் தனது தாய் விமானத்தில் பயணம் செய்தபோது, அவரது இருக்கையில் போதையில் இருந்த ஒரு பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திராணி கோஷ் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தை டேக் செய்திருந்தார்.

இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை இணை மந்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண் பயணிக்கு நேர்ந்த மோசமான அனுபவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #AIFlight #DrunkPassenger
Tags:    

Similar News