செய்திகள்

வீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை - நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Published On 2018-08-31 10:18 GMT   |   Update On 2018-08-31 10:18 GMT
வீடு தேடி வந்து சேமிப்பு பணத்தை பெற்று செல்லும் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். #IndiaPostPayments #PMModi
புதுடெல்லி:

இந்திய அஞ்சல் துறை வங்கித்துறையில் கால்பதிக்கும் வகையில் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க்’ (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி) என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டத்தை தொடங்க மத்திய அரசு தீர்மானித்தது

இந்த வங்கியை தொடங்குவதற்காக 800 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டது.  இப்போது இந்த வங்கி தொடங்குவதற்கான செலவு, திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1,435 கோடி ஆகும். எனவே இந்த வங்கிக்காக மேலும் ரூ.635 கோடி நிதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

கூடுதல் நிதியான 635 கோடி ரூபாயில் 400 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் சார்ந்த செலவினங்களுக்கும், 235 கோடி ரூபாய் மனிதவள செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர் மூலமாகவே பணமும் பெற்றுக் கொள்ளலாம்.



இந்நிலையில்,  டெல்லியில் உள்ள டல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் இந்த திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதேநேரத்தில் நாடு முழுவதும் உள்ள 650 அஞ்சலகங்களில் மத்திய மந்திரிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். 3250 அஞ்சலகங்கள் நாளை இந்த திட்டத்துக்குள் இணைக்கப்படுகின்றன.

வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களில் இந்த  ‘இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க்’ திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IndiaPostPayments #PMModi
Tags:    

Similar News