செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2018-08-29 09:28 GMT   |   Update On 2018-08-29 09:28 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
புதுடெல்லி:

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  2 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet

Tags:    

Similar News