செய்திகள்

ரபேல் விவகாரம் - ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு

Published On 2018-08-25 21:56 GMT   |   Update On 2018-08-25 21:56 GMT
ரபேல் போர் விமான விவகாரத்தில், ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
அகமதாபாத் :

வெளிநாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டி உள்ளது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பாக, அந்த பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ‘ரிலையன்ஸ் பாதுகாப்பு, இன்ப்ராட்ஸ்ரக்சர், ஏரோஸ்ட்ரக்சர்’ நிறுவனத்தின் சார்பில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரை தங்கள் நிறுவனத்துக்கு களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 7–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி நே‌ஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி பி.ஜே.தமகுவாலா உத்தரவிட்டார்.
Tags:    

Similar News