செய்திகள்

வாஜ்பாய் அஸ்தி 100 நதிகளில் கரைப்பு

Published On 2018-08-20 07:09 GMT   |   Update On 2018-08-20 07:09 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 100 நதிகளில் நாளை கரைக்கப்பட உள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் மறுநாள் டெல்லியில் நடத்தப்பட்டன.

அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நேற்று முன்தினம் அஸ்திகள் சேகரிக்கப்பட்டன. அந்த அஸ்திகளை கரைக்கும் பணி நேற்று தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் நேற்று கங்கையில் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமீதா உறவினர்களுடன் சென்று கரைத்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் யோகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதற்கிடையில் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம், சென்னை, பவானி, வைகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் வாஜ்பாய் அஸ்தியை 100 நதிகளில் கரைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வாஜ்பாய் அஸ்திகள் பிரிக்கப்பட்டு 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 நதிகளில் வாஜ்பாய் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கரைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Vajpayee #RIPVajpayee #AtalBihariVajpayee #VajpayeeAsthiimmersed
Tags:    

Similar News