செய்திகள்

பீகாரில் இரு பெண்கள் மர்ம மரணம் - காப்பக உரிமையாளர் உள்பட் 2 பேர் கைது

Published On 2018-08-13 00:38 GMT   |   Update On 2018-08-13 00:38 GMT
பீகாரில் காப்பகம் ஒன்றில் 2 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். #BiharShelter
பாட்னா:

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள நேபாளி நகரில் செயல்பட்டு வருவது ஆஸ்ரா பெண்கள் காப்பகம். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த காப்பகத்தில் சுமார் 17 வயது மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அதிக காய்ச்சல் காரணமாக இரு பெண்களும் பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக காப்பகம் நிர்வாகத்தினர் கூறினர். ஆனால், பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது தெரிய வந்தது.

இரு பெண்கள் இறந்தது தொடர்பாக காப்பக உரிமையாளர் சீரந்தான் குமார் மற்றும் காப்பக பாதுகாவலர் ரேணுகா தயாள் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, முசாபர்பூர் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவி பெற்று நடத்தப்படும் காப்பகத்தில் தங்கியிருந்த 30க்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News