செய்திகள்

காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவி ஆசியா அந்திராபி சிறை காவல் செப்.7 வரை நீட்டிப்பு

Published On 2018-08-10 16:37 IST   |   Update On 2018-08-10 16:37:00 IST
ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவினைவாத இயக்க தலைவரின் மனைவியும் தேசதுரோக வழக்கில் கைதானவருமான ஆசியா அந்திராபி-யின் சிறை காவல் செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. #AsiyaAndrabi
புதுடெல்லி:

காஷ்மீரில் இயங்கிவரும் அனைத்து கட்சி ஹுரியத் மாநாட்டில் அங்கம் வகிக்கும் ‘துக்த்தரன் இ மில்லத் என்னும் பெண் பிரிவினைவாத இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆசியா அந்திராபி. இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்துதர வேண்டும் என்னும் கொள்கைக்காக போராடும் இவரது இயக்கத்தில் பல்வேறு பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பிரிவினைவாத இயக்கத்தை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் காசிம் ஃபக்டூ என்பவரை இவர் கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

1992-ம் ஆண்டிலிருந்து டாக்டர் காசிம் ஃபக்டூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் காஷ்மீரில் பல்வேறு போராட்டங்களை ஆசியா அந்திராபி தலைமைதாங்கி நடத்தி வந்தார்.

25-3-2015 அன்று காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடியது, ஜம்மு-காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட வேளையில் 12-9-2015 அன்று ஒரு பசு மாட்டை வெட்டி, அந்த வீடியோவை வெளியிட்டது என பல்வேறு போராட்டங்களால் இவரது பெயர் பிரபலமானது.


இந்நிலையில், பாகிஸ்தானின் தூண்டுதலின்பேரில் தாய்நாட்டுக்கு எதிராக போர் தொடுத்த குற்றத்துக்காக தேசதுரோக வழக்கில் கடந்த 6-7-2018 அன்று ஆசியா அந்திராபி மற்றும் அவருடன் இருந்த இரு பெண்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவரும் நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆசியா அந்திராபி உள்ளிட்ட 3 பெண்களை தேசிய புலனாய்வு முகமை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 7-ம் தேதிவரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NIASpecialCourt #Kashmiriseparatist #AsiyaAndrabi  #AsiyaAndrabijudicialcustody

Tags:    

Similar News