செய்திகள்

ரபேல் விமான ஒப்பந்த விவகாரம்: காங்கிரஸ் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

Published On 2018-08-09 19:26 GMT   |   Update On 2018-08-09 19:26 GMT
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #LokSabha
புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி. மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து, தனியார் நிறுவனம் பயனடையவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார்.



அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதே சமயம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் கோஷமிட்டனர். இரு கட்சியினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவைக்கு வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, நிதி மந்திரி பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.  #RafaleDeal #LokSabha #tamilnews 
Tags:    

Similar News