செய்திகள்
ஆற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்கள்.

சித்தூர் அருகே 3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற தந்தை

Published On 2018-08-06 10:18 GMT   |   Update On 2018-08-06 10:18 GMT
சித்தூர் அருகே மனைவி குடும்ப நடத்த வராததால் 3 குழந்தைகளை ஆற்றில் வீசி தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாலகெங்கனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவருக்கு குழந்தை இல்லாததால். 2-வதாக அமராவதி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு புனித்(6), சஞ்சய்(3), ராகுல் (10 மாதம்) என 3 ஆண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெங்கடேசுக்கும் 2-வது மனைவியான அமராவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில மன வேதனையடைந்த அமராவதி மகன்களுடன் தாய் வீடான செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனால் நேற்று வெங்கடேசன் செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்தார். இது தொடர்பாக இருவருக்கும் நேற்றிரவு 10 மணி வரை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

3 குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது நீ வராவிட்டால் மகன்களை அழைத்து செல்கிறேன் என வெங்கடேசன் கூறி விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

கங்காதரநெல்லூர் அருகே சென்ற போது மனைவி வராத ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன் அங்குள்ள நீவா ஆற்றில் திடீரென 3 மகன்களையும் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இன்று காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள் ஆற்றில் 3 குழந்தைகளின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கங்காதரநெல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News