செய்திகள்

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி - காங்கிரஸ் அதிர்ச்சி

Published On 2018-08-06 11:06 IST   |   Update On 2018-08-06 11:06:00 IST
கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடும் என்ற தேவேகவுடாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. #DeveGowda #JDS #Congress
பெங்களூர்:

மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா பெங்களூரில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவுடன் பேச்சு நடத்தினேன்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தால் இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடும்.

ஆட்சி செய்வதில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும். அதில் எந்தவித குழப்பமும் இல்லை. எனவே தனித்து போட்டியிடுவதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்களது முடிவை அறிய நான் வருகிற 11-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளேன். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்படும்.



நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

உள்ளாட்சி தேர்தலுக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #JDS #Congress

Tags:    

Similar News