செய்திகள்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்

Published On 2018-07-19 08:53 GMT   |   Update On 2018-07-19 08:53 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு இன்று விளக்கம் அளித்துள்ளது. #Sabarimalatemple
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.



ஆனால், வயது வித்தியாசமின்றி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று விசாரணையின்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறினர்.

இந்த வழக்கு குறித்து பேசிய கேரள மந்திரி அறநிலையத்துறை மந்திரி சுரேந்திரன், மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு கேரள தேவசம் போர்டு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கான காரணங்களை விளக்கினார்.

‘சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தேவசம் போர்டு வழக்கறிஞர் தெரிவித்தார்.  இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  #Sabarimalatemple

Tags:    

Similar News