செய்திகள்
நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து 250 இந்தியர்கள் மீட்பு
மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
காத்மண்டு:
மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையிலும், நேபாள்கஞ்ச் - சிமிகோட் - ஹில்சா மலைப்பகுதியில் சிக்கியிருந்த 250 இந்தியர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் நேபாள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Mansarovar #PilgrimsRescue