செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு - முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல்

Published On 2018-07-03 05:57 GMT   |   Update On 2018-07-03 05:57 GMT
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkar
புதுடெல்லி :

மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டனர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இவ்வழக்கில் சசி தரூர் மீது போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர் மேலும், ஜூலை  7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூருக்கு டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் சம்மன் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று சசி தரூர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ShashiTharoor #SunandaPushkar 
Tags:    

Similar News