செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கி அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்த இளம்பெண்

Published On 2018-06-20 11:25 GMT   |   Update On 2018-06-20 11:25 GMT
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது இளம் பெண்கள் கிரக்கம் கொள்வது போல, ஐபிஎஸ் அதிகாரியின் உடற்கட்டில் மயங்கிய பெண் ஒருவர் அவரை சந்திக்க 1200 கி.மீ பயணித்துள்ளார்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் சச்சின் அதுல்கர். 34 வயதான இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். நல்ல உடற்கட்டுடன் காணப்படும் இவரது புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து, அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகமாயினர்.

சச்சினின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த பஞ்சாபை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெட்டியை கட்டி 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து மூன்று நாட்களுக்கு முன்னதாக மத்திய பிரதேசத்திற்கு வந்துள்ளார். எஸ்.பி அலுவலகத்திற்கு வந்து சச்சின் அதுல்கரை பார்த்தே தீருவேன் என ஒற்றக்காலில் நின்ற அந்த பெண்ணை, போலீசார் ரெயில் நிலையத்துக்கு கூட்டிச்சென்று பஞ்சாப்புக்கு ரெயில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால், போகும் வழியில் ரெயிலில் இருந்து குதித்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டல் விடவே, போலீசார் பின்வாங்கினர். என்ன சொல்லியும் அந்த பெண் சமாதானம் ஆக மறுக்கிறார். மனநல ஆலோசகர்களிடம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என உள்ளூர் போலீசார் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த எஸ்.பி சச்சின் அதுல்கர், “பொதுவான விவகாரங்கள் குறித்து என்னை சந்திப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த பெண் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்கிறார். அது தவறான முறையாகும்” என கூறியுள்ளார்.
Tags:    

Similar News