செய்திகள்

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மந்திரி மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-06-17 19:11 GMT   |   Update On 2018-06-17 19:11 GMT
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடன் கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக லோக் நாயக் ஜெய் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AAP #Delhisitinstrike #SatyendraKumarJain
Tags:    

Similar News