செய்திகள்

அட்டப்பாடி- பாலக்காடு பகுதியில் பலத்த மழை - வீடுகள் இடிந்தன

Published On 2018-06-14 14:22 IST   |   Update On 2018-06-14 14:22:00 IST
பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தென்மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் மன்னார்காடு-அட்டபாடி செல்லும் சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ராட்சத மரம் சாய்ந்தது.மரம் விழுந்ததில் ஒரு பக்க சாலையே பெயர்ந்து சேதம் அடைந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மன்னார்காடு போலீசார் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் 12 மணி நேரம் சாலை சீரமைப்புக்கு பின் சாலை சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

இதேபோன்று பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீராதாரங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பலத்த மழையால் பாலக்காடு அருகே பாலக்கயத்தில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்தது.

மண்சரிவால் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பாயப்புல்லு, முன்னாம்தோடு, இருட்டுகுழி ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. 
Tags:    

Similar News