செய்திகள்

முறைகேடான பணப் பரிவர்த்தனை - பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு 7 நாள் விசாரணை காவல்

Published On 2018-06-09 15:20 GMT   |   Update On 2018-06-09 15:20 GMT
முறைகேடான பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உபேந்திரா ராயை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #Delhicourt #journalistUpendraRai #7daysEDcustody
புதுடெல்லி:

டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர்.

இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

உபேந்திர ராயிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் அவரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கிடையில், நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உபேந்திரா ராய் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில், உபேந்திர ராய் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னை காவலில் வைத்திருப்பதற்கு இனி அவசியம் இல்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதனை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ நீதிபதி சந்தோஷ் உபேந்திர ராய்க்கு ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார். சொந்த ஜாமின் தொகையாக 5 லட்சம் மற்றும் அதே தொகைக்கு இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உபேந்திரா ராயிடம் மேற்கொண்டு விசாரிக்க உள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி கோர்ட்டில் இன்று மீண்டும் முறையீடு செய்தனர்.

இதன் அடிப்படையில், உபேந்திரா ராயை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க இன்று மாலை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். #Delhicourt #journalistUpendraRai #7daysEDcustody
Tags:    

Similar News