செய்திகள்

கட்டுக்கடங்காத வன்முறை எதிரொலி- ஷில்லாங் நகரில் தொடரும் ஊரடங்கு உத்தரவு

Published On 2018-06-05 11:07 GMT   |   Update On 2018-06-05 11:07 GMT
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பரவிய வன்முறை ஓய்ந்தபோதிலும், பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
ஷில்லாங்:

மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 பேர் தாக்கப்பட்டனர். பின்னர் ஒரு கும்பல் தேம் ஆவ் மாவ்லாங் நோக்கி சென்றபோது மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் மீது வன்முறைக் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். எனினும் அந்த கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் போன்ற தீப்பற்றும் பொருட்களை கேன்கள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

தற்போது ஓரளவு பதற்றம் தணிந்து ஷில்லாங்கில் அமைதி திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதப்படை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். #ShillongViolence #ShillongCurfew
Tags:    

Similar News