செய்திகள்

இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ராஜா ராம் மோகன் ராயின் பிறந்தநாளை டூடுலாக கொண்டாடும் கூகுள்

Published On 2018-05-22 10:42 IST   |   Update On 2018-05-22 10:42:00 IST
இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy
புதுடெல்லி:

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராய்  மே 22, 1772 -ம் ஆண்டு வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்றும், புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சமாஜம் கி.பி. 1828 இல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது.



அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார். தனது விடா முயற்சியால் சதி என்னும் மூட நம்பிக்கையை ஒழித்தார். மேலும், குழந்தைகள் திருமணம், ஜாதி முறை, பலமணம், கொத்தடிமை முறை மற்றும் கல்வியறிவின்மைக்கு எதிராக போராடினார்.

இந்தியாவில் மேற்கத்திய கல்வியை புகுத்துதில் ராஜாராம் ஆர்வமாக இருந்தார். இந்திய மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் வேதாந்தா கல்லூரி, இந்து கல்லூரி மற்றும் ஆங்கிலோ இந்து பள்ளியை தொடக்கினார்.

இந்நிலையில், இந்தியாவில் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்து, மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் இன்று டூடுலாக கொண்டாடி வருகிறது. #Googledoodle #RajaRamMohanRoy

Tags:    

Similar News