செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

Published On 2018-05-02 07:45 GMT   |   Update On 2018-05-02 07:45 GMT
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை ஜூலை 10-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AircelMaxisCase #KartiChidambaram
புதுடெல்லி:

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த முறைகேட்டில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது.

இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 16-ம் தேதி நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் மனு மீதான வாதங்களை முன்வைக்க மேலும் அவகாசம் வழங்கும்படி அமலாக்கத்துறை வழக்கறிஞர் நிதேஷ் ராணா கேட்டுக்கொண்டார். இது தொடர்பான மற்றொரு வழக்கு ஜூலை 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்த நீதிபதி, வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தார்.  #AircelMaxisCase #KartiChidambaram
Tags:    

Similar News