செய்திகள்

கேரளாவில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்துக்கொலை - கணவர் தப்பி ஓட்டம்

Published On 2018-05-02 06:28 GMT   |   Update On 2018-05-02 06:28 GMT
கேரளாவில் குடும்ப பிரச்சனையில் மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி கணவர் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் வெள்ளிக்குளங்கரையை சேர்ந்தவர் வீராஜ், இவரது மனைவி ஜிது (28) இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஜிது தனது தந்தை ஜனார்த்தனன் வீட்டில் வசித்து வந்தார்.

பெற்றோர் சமரசம் செய்தும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை. இதனால் விவாகரத்து கேட்டு அவர்கள் இரு வரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவர் பெயரில் உள்ள கடன் தொடர்பாக பேசி தீர்ப்பதற்காக இருவரும் பெண்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் குடும்பஸ்ரீ என்ற அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்தனர்.

கூட்டம் முடிந்து ஜிது தனது தந்தை ஜனார்த்தனனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீராஜ் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை ஜிது மீது ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட குடும்ப ஸ்ரீ அமைப்பை சேர்ந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று தீ காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜிதுவை காப்பாற்றி திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜிது மரணம் அடைந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வீராஜை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News